Monday, March 14, 2011

இது நியாயமா பதிவர்களே?

கொஞ்ச நாட்களாக பதிவரசியல் அனைவரையும் பிடித்து ஆட்டி வருகிறது.  சொந்த விருப்பு வெறுப்புகள், பொறாமை, ஈகோ பிரச்சனைகளாலேயே இந்த அரசியலின் போக்கு நிர்ணயிக்கப்படுகிறது என்பது மிகவும் வருத்தப் படக்கூடிய விஷயம்.

"சில பதிவர்கள் குழு அமைத்துக்கொண்டு...தங்களுக்குள் ஓட்டு போட்டுக்கொள்கின்றனர்..அவர்கள் சாதாரணமாக உப்புமா பதிவு,ஒன்றன் கீழ் ஒன்றாக வார்த்தைகள் போட்டு கட்டுரை எழுதி கவிதை என எழுதி சாதாரணமாக 20 ஓட்டு வாங்கி விடுவார்கள்..அப்போதான் அதே குழுவில் இருக்கும் இன்னொருவர் போடும் உப்புமா கவிதைக்கு இவர் ஓட்டு போடுவார்....சில பதிவர்கள் சாட்டில் வந்து தங்கள் இடுகை முகவரி கொடுத்து படிக்க சொல்வது வழக்கம்..அதுபோலத்தான் நானும் செய்தேன்..உடனே கமெண்ட் போடு ...ஓட்டு போடு..என வற்புறுத்துகிறார் என்னை சித்ரவதை செய்கிறார் என ஒரு பதிவர் புரளியை கிளப்பி விட்டுவிட்டார்...அட போ..நீயும் என்னை சாட்டில் வந்து ஓட்டு கேட்டவன் தானே...இப்படி பொய் பேசுகிறானே என நினைத்துக்கொண்டு இனி திரட்டியில் இணைப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்....இது மோசமான அரசியலாக இருக்கிறது.."

சமீபத்தில் இதை ஒரு பதிவில் பார்த்தேன். அது எங்கே என்று பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள், தெரியாதவர்களுக்கு அது வேண்டாம். தேவையில்லை.

குழு, குழு என்கிறாரே இன்று யார்தான் குழுவாக இல்லை? பதிவு எழுத ஆரம்பித்து ஆறு மாதத்திற்கு மேல் உள்ள அனைவருமே ஒரு குழுவிலோ அல்லது தனக்கென உள்ள ஒரு நட்பு வட்டதிலோ தான் இருக்கிறார்கள்.  பெரும்பாலான பதிவர்களின் வேறு வேறு பதிவுகளை உற்று நோக்கிப் பாருங்கள், ஆயிரமாயிரம் ஹிட்டுக்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சிலரே எல்லா பதிவுகளுக்கும் வந்து கமென்ட் போடுகிறார்கள், ஓட்டுப் போடுகிறார்கள் என்பது புரியும். பதிவுலகத்தில் தனக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளாத பதிவர்களே இல்லை (புதியவர்களைத் தவிர). சில நட்பு வட்டங்கள் போரம்களை ஆரம்பித்து கருத்துப் பறிமாற்றத்திலும் ஈடுபடுகின்றன என்பதையும் காண்கிறோம்..

அவர்  சொன்னது போல, குழு அமைத்துக் கொண்டு ஓட்டுப் போட்டால், அந்தக் குழுவினர் அனைவரின் பதிவுகளும் கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையிலான ஓட்டுகளைத் தான் பெற்றிருக்க வேண்டும். பார்த்தால் அப்படித் தெரியவில்லையே? மேலும் அப்படிச் செய்தால், தினமும் தமிழ்மணம் மகுடத்தில் அவர்கள் பதிவுகள் மட்டும்தான் வரும். அப்படியா நடந்து கொண்டிருக்கிறது?

உங்களுக்கு ஒரு பதிவரிடம் ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அவரிடமே தனி மெயிலில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாமே? மெயில் இல்லையென்றால், நண்பர்களிடம் சொல்லலாம், அதைவிடுத்து பதிவில் போடுவது, தெருவில் இறங்கி குழாயடிச் சண்டை போடுவதற்கு ஒப்பானது. முதலில் அவை நாகரிகத்தை பழகுங்கள், பின்பு மகுடம் ஏறலாம். உங்கள் போட்டியை பதிவுகளின் தரத்தில் காட்டுங்கள். வார்த்தைகளில் அல்ல.

நண்பர்களிடம் தனது பதிவின் லிங்கைக் கொடுத்து படிக்கச் சொல்வதில் தப்பில்லை. ஆனால் மெயிலிலோ சாட்டிலோ சென்று ஓட்டுப்போடுங்கள் என்று சொல்வது சற்று எல்லை மீறுவதாகவே எனக்குப் படுகிறது. பிடித்திருந்தால் அவர்களே போடட்டுமே. நண்பர்கள் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு எல்லாப் பதிவுகளுக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறான போக்கு. எல்லாவற்றிற்கும் காரணம் தமிழ்மணத்தின் வாராந்திர தரவரிசையே என்றால் அது மிகையல்ல.

தமிழ்மண வாராந்திர தரவரிசையை வைத்துக் கொண்டு பதிவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வெகுபிரபலமாக உள்ள பதிவர்கள் சிலர்,  சினிமாவில் கால்பதிக்க முயன்று கொண்டிருப்பதை அறிவோம். அவர்கள் பிரபல பதிவர்கள் என்பதற்காக வாய்ப்புகள் அவர்கள் கைகளில் தூக்கி வைக்கப்பட்டனவா? இல்லையே? இது அவர்கள் முயற்சியையோ, திறமையையோ ஏளனப்படுத்துவதற்காக அல்ல, பதிவர்களின் பிரபல்யத்தின் சந்தை மதிப்பை சொல்வதற்காகவே. நட்புகளின் மூலமாக ஒருசில அனுகூலங்கள் கிடத்திருக்கலாம். ஆனால் திறமையே ஒருவரை உயர வைக்கும்.

இந்தத் தரவரிசைகள், ஓட்டுகள், ஹிட்டுகள் எல்லாமே மெய்மறக்கச் செய்யும் போதையைப் போன்றவை. அதில் சிக்கிக் கொண்டால் தேவையில்லாத நேரவிரயமும், மன உளைச்சலுமே மிச்சம். தரவரிசைகளுக்காக குப்பை கூளங்களைப் போல எழுதித் தள்ளுகிறார்களே, அதை அவர்களாலேயே மீண்டும் ஒருமுறை படிக்க முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஹிட்டுகளுக்காக இன்று தினம் மூன்று முதல் நான்கு பதிவுகள் போடும் பதிவர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் உழைப்பையும் திறமையயும் குறைத்து மதிப்பிடவோ அல்லது ஒருவர் ஒரு நாளைக்கு இத்தனை பதிவுதான் போடவேண்டும் என்று சொல்லவோ நான் முயலவில்லை. வாராந்திர தரவரிசையில் முதல் ஐந்து இடங்களை அவர்கள் தான் அலங்கரிக்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அதையே மற்றவர்களும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளும் போக்கு சரியானதாக தோன்றவில்லை.


கூகிளின் ஈடு இணையற்ற வசதியான இந்த ப்ளாக்கர் இன்று நம்மில் பலரை எழுத்தாளர்கள் ஆக்கியுள்ளது. அதனை சரிவரப் பயன்படுத்துவோம். உங்களுக்குத் தோன்றுவதை உங்கள் தனித்தன்மையோடு எழுத முயலுங்கள். அடுத்தவரை காயப்படுத்தாதீர்கள், அடுத்தவர்களின் படைப்புகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்ததீர்கள்.  யார் வேண்டுமென்றாலும், என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம் என்பதே பதிவுகளின் சிறப்பு, அதை பொறுப்புடன் பயன்படுத்துங்கள்.

9 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nach

Anonymous said...

நீங்கள் சொல்வதில் அனைத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது ... வீண் வேளைகளால் நல்ல எழுத்தும் நல்ல எழுத்தாளர்களும் தமிழ் பதிவுலகில் காணமல் போகாமல் செய்வதே நமது கடமையாக இருக்கவேண்டுகிறேன்

settaikkaran said...

ரைட்டு.! :-))

மர்மயோகி said...

மிகச்சரியான சாட்டையடி பதிவு..நன்றி..

கீறிப்புள்ள!! said...

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.. :)

மங்குனி அமைச்சர் said...

good one

டக்கால்டி said...

நல்லா பாத்துக்குங்க நான் உங்களுக்கு கமெண்ட்டு போட்டுட்டேன்...
வோட்டு போடலை...
என் இடுகைகளுக்கு ஒட்டு போடும் நண்பர்களுக்கு நன்றி. ஆனால் நான் ஒட்டு போட்ட இடுகைகள் மிகக் குறைவு...எனது கருத்துக்களை மட்டும் முடிந்த வரையில் பின்னூட்டத்தில் சொல்லி வருகிறேன். அதுவும் படிக்கவும், பின்னூட்டவும் நேரம் இருந்தால்.

Anonymous said...

யாரோ ஒரு பிரபல பதிவர்தான் இப்படி ஒரு பிளாக் ஆரம்பித்திருக்கிறார் நடத்துங்க வாத்தியாரே

Anonymous said...

இது மாதிரி பதிவர்களுக்கு அட்வைஸ் செய்து சிலர் பொழப்பை ஓட்டுகிறார்களே..ஸாரி ஹிட்ஸ் அடிக்கிறார்களே அவர்களுக்காக ஒரு பதிவிடுங்கள்

Post a Comment

கவனம், இப்போது உங்கள் ஐபி நம்பர் எங்களிடம்!