தினமும் கண்ட கண்ட செய்திகளைப் படித்து படித்து இப்போ மூளையே மழுங்கி விட்டது. எது நடந்தாலும் நமக்கு ஒண்ணும் ஆகலேன்னா பரவாயில்லைன்னு நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். எதைப் பற்றித்தான் கவலைப்படுவது? இந்த அரசியல் கட்சிகள் தந்திரமாக மக்களை ஏதாவது ஒரு கவலையிலேயே வைத்திருக்கிறார்கள்.
இப்படித்தான் சில தினங்கள் முன்பு கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த போது தோன்றிய ஒரு விபரீதமான யோசனை. அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தோன்றக்கூடிய ஒரு வில்லங்கமான திட்டம் அது. எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை.
சமீபகாலமாக மத்திய அரசு அன்றாடம் ஒரு பிரச்சனையைச் சந்திப்பது வாடிக்கை ஆகிவிட்டது. ஸ்பெக்ட்ரம், விலைவாசி, வெங்காயம், பெட்ரோல், ஸ்விங் வங்கி கணக்குகள் என்று அரசிற்கு ஏகத்திற்கும் கெட்ட பெயர் வந்துவிட்டது. சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்து மக்கள் எல்லாப் பிரச்சனைகளையும் மறந்துவிடமாட்டார்களா என்று பார்ஹ்ட்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரம் பார்த்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமாக இருக்கிறது. இந்திய அணி கோப்பையை வென்று விட்டால் மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்தானே? அப்போ அரசே ”முயன்று” நமது அணிக்கு கோப்பை கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டால் பிரச்சனைகள் (தற்காலிகமாவாவது) மறக்கப்பட்டு விடுமல்லவா? இதுதான் அய்யா எனக்கு ஏற்பட்ட அந்த வில்லங்கமான யோசனை!
உண்மையிலேயே அப்படி நடந்தாலும் நடக்கலாம். எதற்கும் இருக்கட்டும் என்று எல்லார் காதிலும் சும்மா போட்டு வைக்கிறேன். ஒருவேளை அப்படியே நடந்துவிட்டால் சும்மா சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காமல், நமது அணியைப் பாராட்டி உங்கள் தேசபக்திக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்!